Monday, June 27, 2016

ஜங்கிள் புக்.. கதை. 3

                     யானையைக் கடித்த பூனை

           சிவப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் இருந்த அந்தப் பூனையின் பெயர் அகங்காரன்.
           அது எப்பவும் ஒரு செயலை எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டேயிருக்கும்.
           அதனுடைய வம்சம்தான் என்று புலிகள் என்று கேள்விப்பட்டதில் இருந்து. அதனால் அதற்கு அகந்தை தலைக்கேறிவிட்டது.
           புலிகள் என்னோட வம்சம்.. நான் சின்ன உருவம்னு என்கிட்ட வச்சிக்கிட்டிங்க.. அத்தனைபேரையும் கொன்னுடுவேன்னு.. மிரட்டவும் ஆரம்பித்துவிட்டது.
           எதற்கு வம்பு என்று சின்ன விலங்குகள்  விலகிப்போயின. பெரிய விலங்குகளோ அதை அலட்சியப்படுத்திவிட்டுப்போயின.
           ஆனால் அகங்காரனின் ஆணவம் குறையவேயில்லை.
           ஒரு முறை சாதுவன் என்கிற பெண்யானை இந்த பூனையின் முன் வந்தது. உடனே அகங்காரன் அதனிடம் என்னுடைய வம்சம் புலி என்று சொல்லிப் பெருமைப்பட்டது.
           அதனால் என்ன? என்றது சாதுவன்
           என்ன இப்படிக் கேட்டுவிட்டாய். உனக்கு என்னிடத்தில் பயமே யில்லையா என்றது?
           உடனே சாதுவன் சிரித்துவிட்டது.

           அகங்காரனுக்கு அளவுக்கடந்த கோபம் வந்துவிட்டது. உடனே –ஓடிப்போய் அந்த யானையின் காலைக் கடிக்க ஆரம்பித்தது. உடனே சாதுவன் என்கிற யானை வலிபொறுக்கமுடியாமல் அப்படியே கீழே விழுந்துவிட்டது. அகங்காரனுக்கு நிறைய மகிழ்ச்சி..
           பார்த்தீர்களா என் பலத்தை என்று அந்த யானையின் மேல் நின்று நடனம் ஆட ஆரம்பித்துவிட்டது. அப்படி ஆடும்போது சட்டென்று சறுக்கிவிட கீழே விழுந்தது.
           இப்போது கண் விழிப்பு வந்து இதுவரை கண்டது கனவென்று அதற்கு புரிந்தது. அப்போது பக்கத்தில் சாதுவன் யானை நின்றுகொண்டிருந்தது.
           என்ன அசந்த தூக்கமா? என்றது சாதுவன்.
           ஆமாம் என்றது.

           இனி இப்படித் தூங்காதே.. உன்னை இப்போது ஒரு புலி அடித்து உண்ண வந்தது.. நல்லவேளை நான் இருந்ததால் அதனால் முடியவில்லை. பாவம் அசந்து தூங்குகிறாய் என்று காவலுக்கு நான் இருந்தேன்.. போய் உன் இடத்தில்  தூங்கு என்றபடி சாதுவன் போய்விட்டது.
           அகங்காரன் தாங்கமுடியாத அவமானத்தில் தலைகுனிந்து நின்றது.
          
           நீதி.  அகந்தையின் முடிவு அவமானமே..
           

3 comments:

  1. அருமையான கதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. சில நீதிகளை முன் வைக்க விலங்குகளின் மூலம் சொல்வது நல்ல யுத்தி.

    ReplyDelete